Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil - திருக்குறள் - சான்றாண்மை

 

திருக்குறள்

சான்றாண்மை (பண்புகளால் நிறைந்து நிற்றல்) (Source TN Textbook)

பொருட்பால்

அதிகாரம்(99)

பொருள்-குடியியல்

1.கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு.

விளக்கம்: நல்ல குணம் கொண்டவர்கள் நல்ல செயல்களை எல்லாம் தமது கடமை என நினைத்து வாழ்வர்.

2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று.

விளக்கம்: நல்ல குணங்களை கொண்டு இருந்தாலே எல்லா சிறப்பும் வந்து சேரும்.வேறு எந்த நலன்களும் சிறப்பை தராது.

3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)

ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.

விளக்கம்: அன்புடைமை,நாணம்,உதவி செய்தல்,இரக்கம் கட்டுதல்,உண்மை பேசுதல் போன்ற ஐந்து குணங்களை சான்றாண்மையின் தூண்களாகும்.

4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.

விளக்கம்: தவம் என்பது பிற உயிர்களை கொல்லாமை,பிறர் குறைகளை சொல்லாமை சான்றாண்மை எனப்படும்.

5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

விளக்கம்: ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிக்க ஆற்றலும் பணிவாக நடத்தலும் வேண்டும்.அதுவே பகைவரை நண்பராக்க உதவும்.

6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

விளக்கம்: தம்மை விட ஆற்றல் குறைந்தவரிடத்தில் தோல்வி அடைத்தால் அதை ஏற்று கொள்ள வேண்டும்.அதுவே ஒருவரின் சான்றாண்மையை அறிய உதவும் உரைகல் ஆகும்.

7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

விளக்கம்: நமக்கு தீங்கு செய்தவருக்கு நன்மை செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் சான்றாண்மை பண்பு இருந்தும் எந்த பயனும் இல்லை.

8.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.

விளக்கம்: சான்றாண்மை என்னும் பண்பு ஒருவருக்கு இருந்தால் வறுமை அவருக்கு ஒரு குறையாக இருக்காது.

9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

விளக்கம்: சான்றாண்மை பண்பு கொண்டவர்களை கடல் என்று புகழ்வர்.உலகம் அழியும் காலம் வந்தாலும் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள்.

10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.

விளக்கம்: சான்றாண்மை பண்பில் குறைவு ஏற்பட்டவர்களின் பாரத்தை பூமி தாங்காது.

No comments:

Post a Comment