Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil - சித்தர் பாடல்

சித்தர் பாடல்   (Source TN Textbook)

  வைதோரைக் கூட வையாதே – இந்த

  வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

  வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

  வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!

 

  பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்

  பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!

  வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்

  வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!

 

  போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்

  புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!

  சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர்

  தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!

 

  கள்ள வேடம் புனையாதே – பல

  கங்கையிலே உன்கடம் நனையாதே!

  கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்

  கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே!

 

பாடல் பொருள்:

    உன்னை வைதவரைக்கூட நீ வையாதே; இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே; பிறர்க்குத் துன்பம் தரும்செயல்களைச் செய்யாதே; கல்லெறிந்து பறவைகளைத் துன்புறுத்தாதே!

 

   பாம்போடு விளையாடாதே! பெண்களைப் பழித்துப் பேசாதே! பிறரிடம் கசப்பான சொற்களைப் பேசாதே! உன் இறுமாப்பைப் பிறர்க்குக் காட்டாதே!

 

   பிறர் கொண்டாடிச் செய்யும் சடங்குகளை நீயும் செய்யாதே! உன்னைப் புகழ்ந்து பேச, பிறர் வீடுகளுக்குச் செல்லாதே; உன் வாழ்வைப் போற்றி நீ பெரிதாக எண்ணாதே! பிறருக்கு இழிவை உண்டாக்கும் தாழ்வான செயல்களைச் செய்யாதே!

 

    போலி வேடங்களைப் போடாதே! புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே! யாருடைய பொருளையும் திருட நினைக்காதே! ஒருவனோடு நட்புக்கொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!

 

சொல்பொருள்:

 

வெய்யவினை – துன்பம் தரும் செயல்

வேம்பு – கசப்பான சொற்கள்

வீறாப்பு – இறுமாப்பு

பலரில் – பலர் + இல், பலருடைய வீடுகள்

புகலல் ஒண்ணாதே – செல்லாதே

சாற்றும் – புகழ்ச்சியாகப் பேசுவது

கடம் – உடம்பு

 

பாடல் குறிப்பு:

 

     ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.

 

     பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.

 

   நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.

 

   இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர். 

Tuesday

TNPSC Tamil New Syllabus Study Materials 2022

TNPSC Tamil New Syllabus Study Materials 2022

TNPSC Tamil New Syllabus Study Materials 2022

Tamil New Syllabus pdf

TNPSC Tamil - சிற்றிலக்கியங்கள் - முத்தொள்ளாயிரம்

 

 சிற்றிலக்கியங்கள்

முத்தொள்ளாயிரம்      (Source TN Textbook)

 

1. சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

2. சோழநாடு

காவல் உழவர் களத்துஅகத்துப் போர் ஏறி

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

3. பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

   நகைமுத்த வெண்குடையான் நாடு.

பாடல் விளக்கம்:

      1. சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன. அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே.

         2. நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை ‘நாவலோ’ என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது.

      3. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன. தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன. பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன. முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம்மிக்கது.

Monday

TNPSC Tamil - சிற்றிலக்கியங்கள் - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

   சிற்றிலக்கியங்கள்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்  (Source TN Textbook)

         ஆடுக செங்கீரை!

 செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

கட்டிய சூழிய முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

 பாடல் விளக்கம்:

           திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு

ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும்.

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.

TNPSC Tamil - தேம்பாவணி

 

          தேம்பாவணி      (Source TN Textbook)

எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

1. பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவொ டு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே.

2. வாய்மணி யாகக் கூறும்

வாய்மையே மழைநீ ராகித்

தாய்மணி யாக மார்பில்

தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

தூய்மணி யாகத் தூவும்

துளியிலது இளங்கூழ் வாடிக்

காய்மணி யாகு முன்னர்க்

காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ .

 

3. விரிந்தன கொம்பில் கொய்த

வீயென உள்ளம் வாட

எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

இரும்புழைப் புண்போல் நோகப்

பிரிந்தன புள்ளின் கானில்

பெரிதழுது இரங்கித் தேம்பச்

சரிந்தன அசும்பில் செல்லும்

தடவிலா தனித்தேன் அந்தோ !

 

4. உய்முறை அறியேன்; ஓர்ந்த

உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

செல்வ ழி அறியேன்; தாய்தன்

கைமுறை அறிந்தேன் தாயும்

கடிந்தெனைத் தனித்துப் போனாள்.

இயற்கை கொண்ட பரிவு

 

5. நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே .

 

பாடல் விளக்கம்:

     1. கருணையன், தன் மலர் போன்ற கையைக் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக’’ என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னுள் பொதிந்து வைத்து, பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

 

        2. “என் தாய், தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன். ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!“

 

      3. “என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட

மலரைப்போல வாடுகிறது. தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப்போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்; சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.“

 

     4. “நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்; நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்; காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!“

 

       5. நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்ததுபோன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள, மணம்வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள, பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.