Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 6 - செய்யுள்

 

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 6

செய்யுள்  (Source TN Textbook)

புறநானூறு

 

நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;

அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

 

பொருள்:

    நிலமே! நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நல்லதாக இருக்கிறாய், நிலமே, நீ வாழ்க!

 

சொல்பொருள்:

ஒன்றோ – தொடரும் சொல்

நாடாகு ஒன்றோ – நாடாக இருந்தால் என்ன அல்லது .... எனத் தொடரும்

அவல் – பள்ளம்

மிசை – மேடு

ஆடவர் – ஆண்கள்

இங்கு மனிதர்களைப் பொதுவாகக் குறித்தது

நல்லை – நல்லதாக இருக்கிறாய்

 

நூற்குறிப்பு:

      புறநானூறு = புறம் + நான்கு + நூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.

 

ஆசிரியர்குறிப்பு:

      ஔவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர். அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார். சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.

 

திண்ணையை இடித்துத் தெருவாக்கு!

 

உட்கார் நண்பா, நலந்தானா? – நீ

ஒதுங்கி வாழ்வது சரிதானா?

சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன்

சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?

 

‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ – நீ

புலம்ப வேண்டாம்; நெல்கூட

புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது

பூமியின் பசியைப் போக்கவில்லை?

 

‘கடலின் நான்ஒரு துளி’யென்று – நீ

கரைந்து போவதில் பயனென்ன?

‘கடலில் நான்ஒரு முத்தெ’ன்று – நீ

காட்டு; உந்தன் தலைதூக்கு!

 

வந்தது யாருக்கும் தெரியாது – நீ

வாழ்ந்ததை உலகம் அறியாது;

சந்ததி கூட மறந்துவிடும் – உன்

சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?

 

திண்ணை தானா உன்தேசம்? – உன்

தெருவொன் றேயா உன்னுலகம்,

திண்ணையை இடித்துத் தெருவாக்கு – உன்

தெருவை மேலும் விரிவாக்கு!

 

எத்தனை உயரம் இமயமலை! – அதில்

இன்னொரு சிகரம் உனதுதலை!

எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ

இவர்களை விஞ்சிட என்னதடை?

 

பூமி பந்து என்னவிலை? – உன்

புகழைத் தந்து வாங்கும்விலை!

நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா

நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!

 

ஆசிரியர் குறிப்பு:

        கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில. இவர் வாழ்ந்த காலம் 26.02.1947 முதல் 13.05.2000 வரை.


No comments:

Post a Comment