Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil - கம்பராமாயணம்

கம்பராமாயணம்      (Source TN Textbook)

பாலகாண்டம் ஆற்றுப்படலம்

(ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும்

அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.)

தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்

போ தவிழ் பொய்கை தோ றும் புதுமணற் றடங்க டோறும்

மா தவி வேலிப் பூக வனம்தொ றும் வயல்க டோறும்

ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே.

 

பாடல் விளக்கம்:

           மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயுஆறு. அது, ஓர் உயிர் பல இடங்களில் பாய்கிறது.

 

பாலகாண்டம் – நாட்டுப்படலம்

 

 (இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது.)

 

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

 

பாடல் விளக்கம்:

    குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.

 

பாலகாண்டம்நாட்டுப்படலம்

(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.)

வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்.

 

பாடல் விளக்கம்:

       கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.

 

அயோத்தியா காண்டம்கங்கைப்படலம்

(இராமனுடை மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதைஐயோஎன்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)

 

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையெனொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.

 

பாடல் விளக்கம்:

       பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சை நிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

 

அயோத்தியா காண்டம் - கங்கை காண் படலம்

(கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.)

 

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ.

 

பாடல் விளக்கம்:

      ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?

 

யுத்த காண்டம் கும்பகருணன் வதைப் படலம்

 

(உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், கும்பகருணனை எழுப்பும் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.)

 

உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்

கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

உறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்.

                         

பாடல் விளக்கம்:

    உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!

No comments:

Post a Comment